Saturday, October 29, 2011

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம்

தூக்கு மேடையில் நிற்பது


அரசியல்நியாயம் :


தோழர் மருதையன்


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரணதண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.

ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.

முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.

இவையெல்லாம் தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. சட்டப்பிரிவு 161 அம்மாவின் கருணைக்கரங்களைக் கட்டிப் போட்டிருப்பதனால்தான், தூக்கு தண்டனையை அம்மா ரத்து செய்யமுடியவில்லை என்று அ.தி.மு.க வைச் சேர்ந்த அடிமுட்டாளும்கூட நம்பமாட்டான். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.

தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.

“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.
முதலாவதாக, இம்மரணதண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அவதானிக்கத்தக்கதொரு போர்க்குணம் இருந்தது. அமைப்பு சார்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர்கள் வழக்குரைஞர்களின் போராட்டங்களும் ஈழப்போரின் இறுதி நாட்களில் தமிழகம் இருந்த நிலையை நினைவூட்டின. சமச்சீர் கல்விக்கான போராட்டங்களுக்காக தெருவுக்கு வந்து பழகிய மாணவர்களும், ஈழம் மற்றும் உயர் நீதிமன்ற போலீசு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகளில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கும் வழக்குரைஞர்களும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கக் கூடிய சாத்தியப்பாடு விளங்கிக் கொள்ள முடியாததல்ல.
1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை. இந்த குமுறலின் மீது உப்புக் காகிதத்தைத் தேய்க்கும் விதமாக மூவரின் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால், அது தோற்றுவிக்கும் காயமானது பார்ப்பனக் கும்பலையும் அவர்களது தேசியத்தையும் வெறுக்கின்ற புதியதொரு தலைமுறையை உருவாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்க, ‘அபாயகரமான’ அந்த சாத்தியப்பாட்டினைத் தடுப்பதற்கானதொரு உபாயமாகவும் அம்மா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.

இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.

உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம் பணிந்தளிக்கும் கருணை மனு.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.

இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே” என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர் அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்.

தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.

இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive) குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம் மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.அது மட்டுமல்ல, எந்த ஜெயின் கமிசன் அறிக்கையில் தி.மு.க. வின் புலி ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி 1998 இல் ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்ததோ, அதே ஜெயின் கமிசன் அறிக்கை ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியார் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும், அதற்காகவே பலநோக்கு கண்காணிப்பு முகமை (MDMA) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தும் அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஒரு அரசியல் கொலை வழக்கில், சந்தேகத்திற்கிடமான சிலரை விசாரிக்காமலிருக்கும்போதே ஏனையோரின் உயிரைப் பறிப்பது, அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சதியும் ஆகும்.

இந்திய இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.

‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும். இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.

கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா?

காமன்வெல்த் மாநாடு சிறிலங்காவுக்கு போர்க்களமா?

ஒக்டோபர் 28-ஆம் தேதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 22-ஆவது கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி ஒக்டோபர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள், தங்களின் பொது நலன்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர். இதற்கு காமன்வெல்த் என்கிற பொதுநலவாய அமைப்பு என பெயர் சூட்டப்பட்டது. தற்போது 53 உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம்.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே அடுத்த இரு ஆண்டு காலப்பகுதிக்கும் அமைப்பைத் தலைமை தாங்கும். காமன்வெல்த் அமைப்பு தற்காலத்திற்குப் பொருத்தமான அமைப்பில்லை என்ற பேச்சு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து நாட்டினால் அடிமைகளாகப் பார்க்கப்பட்ட குறித்த நாடுகளின் மக்கள் இன்று 250 கோடி மக்கள் தொகையென அதிகரித்துள்ளது. இவ்வமைப்பின் பெரும்பான்மையான நாடுகளில் வதியும் மக்கள் வறுமையே வாழ்க்கை என்று வாழ்கிறார்கள்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வம்சாவளி இன நாடுகள் செல்வம் செழிக்க வாழ்கிறார்கள். இவர்களுடைய வாழ்கை உயர்வுக்கு இன்றும் காரணமாக இருப்பது பல வறுமையான நாடுகளே. இந்நாடுகளின் அரிய வளங்களை இன்றும் பிரித்தானிய மற்றும் பல மேற்கத்தைய நாடுகளே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குறித்த காமன்வெல்த் அமைப்பினால் இதனுடைய பெரும்பான்மை உறுப்பு நாடுகளில் வதியும் மக்கள் எவ்வித பலனையும் அனுபவிக்கப் போவதில்லை. எனவே, இவ்வமைப்போ தற்காலத்திற்கு பொருத்தமானதில்லை என்று வாதாடுகிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

நல்லது நடந்தால் நல்லதே
2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு காமன்வெல்த் அமைப்பைத் தலைமை தாங்க சிறிலங்கா ஏக்கத்துடன் நாட்களை எண்ணுகிறது. அடுத்த மாநாடு எங்கே நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டபோது, சிறிலங்கா தனது நாட்டில் நடத்த வேண்டுகோள் விடுத்தது. இதற்கு இங்கிலாந்து, கனடா உட்பட பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இறுதிக்கட்டப் போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த சிறிலங்காவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

போர்க்காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் முடிந்தாலும், சிறிலங்காவில் தொடர்ந்தும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. ஜனநாயக அமைப்புக்களான ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான ஒடுக்குமுறைகள் அங்கு இன்னும் தொடர்கின்றன. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்த, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தை சிறிலங்காவில் நடத்துவது பொருத்தமானதாக அமையாது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை சிறிலங்காவில் நடத்துவது என்பது, அமைப்பின் அடிப்படைப் பெறுமானங்களைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமின்றி, அர்த்தமுள்ள மறுமலர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகிய அமைப்பின் நோக்கங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பெறுமானங்கள் மீதான அமைப்பின் பற்றுறுதியைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது. சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடே 2013 முதல் 2015 வரையான காலப்பகுதிக்கு அமைப்பைத் தலைமை தாங்கப்போகின்றது என்ற நிலையில், கூட்டம் சிறிலங்காவில் நடத்தப்படுவது கவலை தருவதாகும். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதாக இருந்தால் அதற்கு முன்பு வன்னியில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூர் மற்றும் அனைத்துலக விசாரணை நடத்த சிறிலங்கா அரசை காமன்வெல்த் நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும்."

கனேடியப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் கடந்த செப்டம்பர் ஆரம்பத்தில் கனேடியப் பல்கலாச்சாரத் தொலைக்காட்சியொன்றுக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்பேட்டியின் போது சிறிலங்கா அரசானது பின்வரும் விடயங்களைக் கடைப்பிடித்து அரசியல் ஜனநாயகப் பாதைக்கூடாக முன்னேறாத பட்சத்தில் சிறிலங்காவில் 2013-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா சார்பில் தான் பங்குகொள்ளமாட்டேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், சிறிலங்கா அரசானது, சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை அகற்றி அரசியல்ரீதியான சமரச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசானது சனநாயக நெறிமுறைகளையும், பொறுப்புணார்வையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தல் வேண்டும். அத்துடன், ஐ.நா. சபையின் போர்க்குற்றம் குறித்த சுயேச்சையான விசாரணைக்கான அழைப்பைத் தான் வரவேற்பதாகவும் கூறியிருந்தார் ஸ்டீபன் கார்ப்பர்.

மகிந்த ராஜபக்சே சந்திக்கவிருக்கும் களம்
சிறிலங்கா அரசினது மனித உரிமை செயற்பாடு குறித்துத் தான் ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் காமன்வெல்த் மாநாட்டில் வைத்து கேள்வி கேட்கப்போவதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் சில வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டார். காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பொறுப்பையேற்க தகுதியான நாடா சிறிலங்கா என்பது குறித்துப் பலமாக கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

அடுத்த தலைவர் பொறுப்பை எப்படியேனும் தனதாக்குவதனூடாக, தான் எதிர்நோக்கும் அனைத்துலக விசாரணை குறித்த வேண்டுகோள்களை மழுங்கடித்து விடலாம் என்று மனப்பால் குடித்து செயற்படுகிறார் மகிந்தா. தனது கனவை நனவாக்க, தானே நேரடியாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்கிற ரீதியில் அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளார் மகிந்தா. இதனை எதிர்கொள்ள உலகத்தமிழர்களும் காத்திருக்கிறார்கள்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைகள் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் ஆஸ்திரேலிய சமஷ்டி காவல்துறையினரிடம் வன்னியில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தி வாக்குமூலம் வழங்கியிருக்கிறார் என ஆஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அத்தொலைக்காட்சி ஒன்பது நிமிட செய்தி விமர்சனத் தொகுப்பொன்றை சிறிலங்கா ஜனாதிபதி விசாரணையை எதிர்நோக்குகிறார் என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவு செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சமஷ்டி காவல்துறை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையில் திருமதி மீனா கிருஷ்ணமூர்த்தி, வைத்தியர் சாம்பவி ஆகியோர் சாட்சியங்களாகப் பதவி செய்துள்ளனர். தற்போது சிறிலங்காவின் ஆஸ்திரேலியத் தூதுவராக இருக்கும் அட்மிரல் திசார சமரசிங்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிறிலங்கா இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் பாலித கோகன்ன, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆகியோர் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவு சமஷ்டி காவல்துறையைக் கேட்டுள்ளது.

மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தான் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கடலில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் தம் மீது தாக்குதல் நடத்தியது வரை இவர் விவரித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்துப் பிரதான ஊடகங்களும் சிறிலங்கா குறித்த செய்திகளை முக்கியமாக வெளியிட்டுவரும் நிலையில் காமன்வெல்த் மாநாடு முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

லண்டன் சென்று மூக்குடைபட்டு திரும்பியது போதாதென்று, அமெரிக்கா வரை சென்று வைத்திய சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். மீண்டும் வைத்திய சிகிச்சை அமெரிக்காவில் பெற வேண்டுமென்று கேட்டபோது...அய்யோ எங்களது நாட்டை விட்டு சென்றுவிட்டாலே போதும் என்று சொல்லி நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்கள் அமெரிக்க அதிகாரிகள். இவைகள் அனைத்தும் போதாது மீண்டும் களம் காணுவேன் என்கிற அகங்காரத்தில் ஆஸ்திரேலியா செல்லத் தயாராகிறார் மகிந்தா. எவ்வாறான அனுபவத்தை அவுஸ்திரேலியாவில் சந்திக்கப் போகிறார் மகிந்தா என்பதை பத்து நாட்களுக்குள் தெரிந்து விடும். அதுவரை காத்திருப்போமாக

Thursday, October 27, 2011

ஒப்பரேஷன் பவான்

இராணுவ நடவடிக்கை -

(அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-4)
பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pawan) - இதுதான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியப் படையினர் இட்ட பெயர்.

''பவான்'' என்ற ஹிந்தி வார்த்தைக்குக் காற்று என்று அர்த்தமாம். இந்தியப்படையினர் காற்றைப் போல யாழ்ப்பாணத்தினுள் உடுருவி, யாழ்ப்பாணம் முழுவதையும் வியாபித்து நிற்கும் நோக்குடன்தான் அவ்வாறு பெயரிட்டார்களோ தெரியவில்லை.

ஆனால், நடைமுறையில் இந்தியப் படையினரால் காற்றைப் போன்று இலகுவாக யாழ்ப்பாணத்தினுள் ஊடுருவ முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினர் வைத்த ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு புதைகுழிகளாகவே இருந்தன. அங்கு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு வீடுகளும் அவர்களது எதிரியின் காப்பரன்களாக மாறியிருந்தன. அவர்கள் சென்ற பாதைகளில் இருந்த பனை மரங்களும், படலைகளும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தும் எதிரிகளாகவே உருப்பெற்றிருந்தன.

இந்தியப்படையினர் திட்டமிட்டபடி யாழ்ப்பாணத்தில் எதுவுமே நடக்கவில்லை.

யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட சீக்கியப் படைவீரர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டுவிட, கொக்குவில் கிராம சபைக்கு அருகாமையில் தரையிறக்கப்பட்ட சுமார் 100 பராக் கொமாண்டோக்கள், தமது அடுத்த கட்ட நகர்வென்ன என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
பிரம்படி வீதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவரது இருப்பிடத்தைச் சுற்றிவழைத்து புலிகளின் தலைவரைக் கைதுசெய்து அழைத்துச் செல்லுவதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பணி. அவ்வாறு புலிகளின் தலைவரைக் கைது செய்து அவரை ஹெலிக்காப்டரில் கொண்டு செல்வதற்கு வழி சமைக்கும் வகையில், ஹெலிக்காப்டர் இறங்குவதற்கு ஒரு தளப் பிரதேசத்தை தயார்படுத்துவதே பரசூட்டில் தரையிறங்கிய சீக்கியப் படையினரின் பணி. தளப்பிரதேசத்தை தயார்படுத்தும் பணியினை மேற்கொள்ளவென வந்த சீக்கியப் படையினரின் பணியினை விடுதலைப் புலிகள் முற்றாகவே முடக்கிவிட்டதால், பராக் கொமாண்டோக்கள் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனை கைப்பறினாலும், தளம் எதுவும் அங்கு அமைக்க முடியாத நிலையில் அவரை எந்த வழியாகக் கொண்டு செல்லுவது என்று இந்தியப்படை அதிகாரிகளால் தீர்மானிக்கமுடியவில்லை.

பலாலி விமாணத்தளத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளின் கவனம் முழுவதுமே, யாழ் மருத்துவபீட மைதானத்தில் தரையிறங்கி புலிகளின் முற்றுகைக்குள் இலக்காகிக் கொண்டிருந்த சீக்கிய வீரர்களை மீட்பதிலேயே இருந்ததால், பராக் கொமாண்டோக்களின் நகர்வுகள் பற்றிய உத்தரவை வழங்குவதில் பலத்த காலதாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டிருந்தன.

அத்தோடு புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்ட எதிப்புக்களும், பராக் கமாண்டோக்கள் இலகுவாக நகர முடியாதபடிக்கு பல தடைகளைப் போட்டிருந்தன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்கள், இந்தியக் கமாண்டோக்களின் நகர்வினை திசைமாற்றியும் விட்டிருந்தது. புலிகள் இந்த அளவிற்கு தயாராக இருந்து யுத்தம் புரிவார்கள் என்று இந்தியப்படை அதிகாரிகள் கனவிலும் நினைக்கவில்லை.

புலிகளின் எதிர்ப்பு அவர்கள் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாகவும், கடுமையானதாகவும் இருந்ததால் அடுத்து என்னசெய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப் போன்று, பிரம்படி வீதியிலும் இந்தியப் பராக் கொமாண்டோக்களை மடக்குவதற்கு புலிகள் ஏதாவது பொறிகளை வைத்திருப்பார்களோ என்ற பயமும், கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த இந்தியப்படை உயரதிகாரிகளைப் பிடித்துக்கொண்டது. இவற்றின் காரணமாக, பராக் கமாண்டோக்களின் நகர்வினைச் சற்று தாமதிக்குமாறு இந்தியப் படை நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவேண்டி ஏற்பட்டது.

பிரபாகரனின் வீடு எங்கே?
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வசித்து வந்த ராஜா என்பவர் நள்ளிரவு முதல் கேட்டுக்கொண்டிருந்த தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டு சத்தத்தை மிகுந்த அச்சத்துடன் அவதானித்துக் கொண்டிருந்தார். பாரதூரமாக ஏதோ நடந்துகொண்டிருக்கின்றது என்பது மட்டும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தெளிவாகப் புரிந்தது. அதிகாலை நான்கு மணியளவில் அவரது வீட்டின் வாசல்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி. ஆயுதம் தரித்த சுமார் ஐம்பது இந்தியப் படையினர் அங்கு நின்றார்கள். அவர்களின் முகங்களில் கோபமும், பதட்டமும் தெரிந்தது.

அவரது அனுமதி இன்றியே வீட்டினுள் நுழைந்த சில இந்தியப் படை அதிகாரிகள், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும், சாரா என்பவர் பற்றியும் விசாரித்தார்கள். அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்லும்படி கூறிவிட்டு வீட்டை முழுவதுமாகச் சோதனையிட்டார்கள். வீட்டின் சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைக் காண்பித்து ''இது பிரபாகரனது படமா?'' என்று ஒரு வீரர் கேட்டார். அதற்கு ராஜா, ''இல்லை இது குருமகாராஜின் படம்'' என்று தெரிவிக்கவே, படத்தின் மீது டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ''மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்று அந்த வீரர் கூறினார்.

இந்தியப் படைக் கமாண்டோக்கள் ராஜாவின் வீட்டில் அதிகாலை ஐந்துமணிவரை தங்கியிருந்தார்கள். இந்த இராணுவ நடவடிக்கையை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவைப் பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு தாமதித்திருக்கலாம். பின்னர் மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய அதிகாலை இந்தியப் படை கொமாண்டோக்கள் ராஜாவின் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள்.

பிரபாகரன் வீட்டிற்கு வழி காண்பிக்க தம்முடன் வருமாறு கூறி ராஜாவையும், அவரது மருமகன் குலேந்திரனையும் அழைத்துக்கொண்டு இந்தியப் படைக் கமாண்டோக்கள் புறப்பட்டார்கள். எத்தனையோ கெஞ்சியும் ராஜாவையும், குலேந்திரனையும் அவர்கள் விடவில்லை.

பிழையான வழிநடத்தல்?
இந்தியப் படையினரின் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் பற்றி பின்நாட்களில் புத்தகங்கள் எழுதிய லெப்.ஜெனரல். திபீந்தர் சிங், எம்.ஆர்.நாராயன்சுவாமி, ராஜேஸ் காடியன் போன்றவர்கள், அக்டோபர் 12ம் திகதி புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை அடையாளம் காண்பிக்கவென்று இந்தியப் படையினர் அழைத்துச் சென்ற நபர் இந்தியப் படையினரை பிழையான பாதையில் வழிநடத்திச் சென்றதாலேயே, இந்தியப் படையினரால் தமது இலக்கினை அடைய முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தமது தோல்விக்கும், இயலாமைக்கும் காரணம் கற்பிக்கவே இந்தியத் தரப்பினர் இவ்வாறு வீன்பழிபோடச் சந்தர்ப்பம் இருக்கின்றது. அதேவேளை, புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை காண்பிக்கவென்று ராஜா என்பவரை அழைத்துச் சென்ற இந்தியப் படையினரால் சரியான இடத்திற்குச் செல்வதற்கு முடியவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது. அத்தோடு, ராஜாவின் மருமகனான குலேந்திரன் 12ம் திகதி இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றார். இவை அனைத்தையும் அடிப்படையாய வைத்துப் பார்க்கின்ற பொழுது, அந்த இரண்டு நபர்களும் தமது வரலாற்றுக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி இருப்பதற்கான சாத்தியத்தை ஊகிக்கக்கூடியதாகவே இருக்கின்றது.

இரத்தப் பாதையில் இந்தியப் படைகள்:
அடுத்த சில நாட்களில் ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும் துன்பகரமான ஒரு அத்தியாயம் இந்தியப் படையினரால் எழுதப்பட்டது. அது ஈழத்தமிழரின் இரத்தினாலேயே எழுதப்பட்டதுதான் இன்னும் பெரிய சோகம்.

புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று கூறி, தமது அடுத்த கட்ட நகர்வினை மேற்கொண்ட இந்தியக் கமாண்டோக்கள் சென்ற பாதை ஈழத்தமிழர்களின் இரத்தத்தால் நனைக்கப்பட்டதாகவே அமைந்திருந்தது. செல்லுமிடமெல்லாம் கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் கொடுமைகளையும்; மேற்கொண்டபடிதான் இந்தியப் படையினர் தமது அமைதிகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

தமக்கு பாதுகாப்பாக இருப்பார்கள், சிங்களப் படையினரிடம் இருந்து தம்மை காப்பாற்றுவார்கள், தமக்கு ஒரு நிரந்தரச் சமாதானச் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஈழத்தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப்படையினர், ஈழத்தமிழர்களை அழித்தொழிப்பதில் என்றுமில்லாதவகையில் முனைப்புக் காண்பித்தார்கள். அந்த அவலங்களின் அத்தியாயங்களைத்தான் தொடர்ந்து வரும் வாரங்களில் நாம் மிக மிக விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கென்று வந்திருந்த பராக் கொமாண்டோக்கள், தமது முயற்சி கைக்கூடாமல் போனதினால் ஏற்பட்ட ஆத்திரத்தை அப்பிரதேசத்தில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களின் மீது திருப்பியிருந்தார்கள். புலிகளின் பலத்தை எதிர்கொண்டு தமது நகர்வினைத் தொடர முடியாது தவித்துக்கொண்டிருந்த பராக் கொமாண்டோக்கள், தமக்கு உதவி வந்து சேரும் வரை அப்பிரதேசத்தில் ஒரு தளத்தை அமைத்து நிலைகொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

மறுதினம், இந்தியப் பராக் கொமாண்டோக்கள் எதிர்பார்த்த உதவி அவர்களை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்திருந்தது.

அந்த உதவிகள் எப்படி வந்தன தெரியுமா? ஈழத்தமிழர்களின் உடல்களை நிலத்தில் கிடத்தி; அவற்றின் மீது கவசவாகனங்களை செலுத்தியே அந்த உதவிகள் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன.

ஈழத் தமிழர்களின் இரத்தத்தால் போடப்பட்ட பாதையில் இந்தியப் படையினரை நோக்கி விரைந்த அந்த உதவி நடவடிக்கை பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.


தொடரும்..


அம்பலத்திற்கு வந்த இரகசிய இராணுவ நடவடிக்கை
- (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-3)

1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos)
2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry)

நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கிருந்ததாகக் கூறப்படும் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைப்பற்றும் பணி, 100 பராக் கொமாண்டோக்களிடம் (Para Commandos) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவரைக் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் பராக் கொமாண்டோக்களை ஹெலிக்காப்டர்களில் பத்திரமாக திருப்பி அனுப்பிவைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மைதானத்தை கைப்பற்றி, தளமாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பணி 13வது சீக்கிய மெது காலாட் படையினரிடம் (13 - Sikh Light Infantry) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி வீதியும், பிறவுன் வீதியும் இணையும் சந்திக்கு அருகே உள்ள கொக்குவில் கிராமசபைக்கு முன்பாக உள்ள வெட்டவெளியில் பராக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டார்கள்.
ஆனால், இந்தியப் படைத்துறை அதிகாரிகள் நினைத்தபடி தரையிறக்கம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.
இந்தியப் படையினர் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.
தரையிறக்கம் இடம்பெற்ற இடத்தினை வெகுவிரைவில் சூழ்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல முனைகளில் இருந்தும் தரையிறங்கிய ஹெலிகளைக் குறிவைத்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடியே இருந்தன.

ஐந்து தரையிறக்கங்களை மட்டுமே இந்தியப் படையினரால் அங்கு மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் எதிர்ப்பு அத்தனை கடுமையானதாக இருந்தது. இந்தியப்படையினரின் மூன்று ஹெலிகள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தரையிறக்கத்தை கைவிட்டு தளம் திரும்பவேண்டி ஏற்பட்டது.

பரசூட்டில் குதித்த சீக்கியர்கள்:
இதேவேளை, இந்தியப் படையினர் தமது முற்றுகைத் தாக்குதல் திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அண்டிய பகுதியில் 13வது சீக்கியப் படையணியினரைப் பரசூட்டுக்களின் மூலம் தரையிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எத்தனித்தார்கள்.
முன்னைய தரையிறக்க நடவடிக்கையைப் போலல்லாமல், இந்த தரையிறக்க நடவடிக்கையை மிகவும் இரகசியமாக மேற்கொள்ளுவதே இந்தியப் படையினரின் திட்டமாக இருந்தது.
கொக்குவில் பிரதேசத்தில் பராக் கொமாண்டோக்களை ஆரவாரத்துடன் தரையிறக்கி புலிகளின் கவனத்தை அங்கு முற்றாகத் திருப்பிவிட்டு, பல்கலைக்கழக மருத்துவபீட பிரதேசத்தில் சீக்கியத் துருப்பினரை பரசூட்டுக்கள் மூலம் இரகசியமாக தரையிறக்கி நிலை கொள்ள வைப்பதே இந்தியப்படையினரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு இரகசியமாக தரையிறங்கும் சீக்கியப்படையினர், யாழ் மருத்துவபீட வளாகத்தைத் தமது தளமாக ஆக்கிக் கொள்ளுவதுடன், தேவை ஏற்பட்டால் கொக்குவில் பிரதேசத்தில் தரையிறங்கிய பராக் கொமாண்டோக்களுடன் சண்டைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பின்புறம் இருந்து தாக்குதல்களைத் தொடுத்து, ஒரு அதிர்ச்சி நடவடிக்கையை மேற்கொள்ளுவதும் அவர்களது திட்டமாக இருந்தது.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம்தான்.
ஆனால் எதிர்காலத்தையும், எதிரியின் எந்த ஒரு நகர்வினையும் கச்சிதமாகக் கணிப்பிடவல்ல தலைவர் என்று அவரது எதிரிகளால் கூட பாராட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், இந்தியத் துருப்புக்கள் இவ்வாறுதான் தமது நகர்வினை மேற்கொள்ளக்கூடும் என்று தமது போராளிகளுக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அப்படி ஒரு நகர்வு மேற்கொள்ளப்படும் பொழுது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, யாழ் மருத்துவ பீட கட்டிடத்தின் மாடிகளிலும், அருகில் இருந்த மரங்களிலும் விடுதலைப் புலிப் போராளிகள் நிலை எடுத்திருந்தார்கள். பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொருப்பாளராக இருந்த பொட்டு அம்மாணின் தலைமையிலேயே இந்த தற்காப்புத் தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியப் படை வீரர்கள் பரசூட்டுக்களில் குதிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே நிலையெடுத்து பதுங்கியிருந்த விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

நள்ளிரவு.
காரிருளில் பரசூட்டுக்களில் தொடர்ச்சியாகக் குதித்துக்கொண்டிருந்த இந்திய படையின் சீக்கிய காலாட் படைப்பிரிவினருக்கு எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று புரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருந்து துப்பாக்கிச் சன்னங்களின் ஒளிகள் தம்மை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் அவதாணித்தார்கள். பரசூட்டுக்களில் தரையிறங்கிக்கொண்டிருந்த பல இந்திய வீரர்கள் தரையைத் தொடும் முன்னதாகவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக இறந்துவிட்டிருந்தார்கள்.

இதில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர். அத்தோடு தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவின் தொலைத்தொடர்பு இயக்குனரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்திய ஜவான்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்:

தரையிறங்கிக்கொண்டிருந்த சீக்கிப் படைவீரர்களுக்கும்சரி, தரையிறக்கத்தை பாலாலி இராணுவத் தளத்தில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கும் சரி, களமுனையில் என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.

சீக்கிய காலாட் படையினரை தரையிறக்கவெனச் சென்ற ஹெலிக்கப்டர்கள் சுமார் 30 படையினரை மட்டுமே தரையிறக்கிவிட்டு, துப்பாக்கிச் சூடு அதிகமாக இருப்பதாகவும், மற்றவர்களை தரையிறக்கமுடியாது என்றும் கூறிவிட்டு தளம் திரும்பிவிட்டன. தரையிறங்கியவர்களின் கதி என்னவென்று அறிவதற்கும் தளத்தில் இருந்தபடி தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தது.

தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்த படையினர் கதி அதைவிட மோசமானதாக இருந்தது. திரும்பிய பக்கமிருந்தெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் தம்மை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. கடும் இருளில் தமது சகாக்கள் எங்கிருக்கின்றார்கள், தாம் எங்கு நிலை எடுக்கவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. தமது அணிக்கு தலைமைதாங்கிவந்த அதிகாரியிடம் இருந்தும் எந்த வித உத்தரவும் வந்தபாடில்லை. தளத்துடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தமது தரப்பில் எத்தனை பேர் தப்பி இருக்கின்றார்கள்? யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள்? யார்யார் இறந்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கெங்கு நிலை எடுத்திருக்கின்றார்கள்? தமது தற்போதைய பலம் என்ன? தமக்கு வெளியில் இருந்து எதாவது உதவிகள் கிடைக்குமா? - எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காரிருள் அவர்களுக்கு எதனையும் தொடர்ந்து செய்வதற்கு அனுமதியளிக்கவும் இல்லை.

இரகசியமான நகர்வினை மேற்கொள்ளவென வந்த அவர்களது நடவடிக்கைகள் பகிரங்கமானது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இரகசியமாகத் தரையிறங்கி, அங்கு பாதுகாப்பு அரன்களை உருவாக்கி நிலையெடுப்பதற்கு ஏதுவாக இந்தியப் படையினர் தம்முடன் சிறிய சவள்களும், சாக்குப் பைகளும் கொண்டு வந்திருந்தார்கள். தரையில் படுத்திருந்தபடி தாம் உடன் கொண்டுவந்திருந்த சவள்கள் மூலம் மண்ணைத் தோண்டிய சீக்கியப் படை வீரர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. அந்தப் பிரதேசம் கடினமான தரையமைப்பைக் கொண்ட பிரதேசம் என்பதால், அவர்களுக்கு அதுவும் முடியவில்லை.

நிலத்தில் படுத்திருந்து நிலை எடுத்தபடி அனைத்து திசைகளை நோக்கியும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு இந்திய ஜவான்கள் தமது துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்ட நிலையில் தம்மைப் பாதுகாக்கவெனத் தமது துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்டிருந்த பையனைட் கத்திகள் (Bayonet) கொண்டு புலிகளை தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

விடிய ஆரம்பித்ததும், விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை இனங்கண்டு துல்லியமாகத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தினுள் தரையிறங்கிய 30 இந்திய சீக்கியப் படைவீரர்களுள் 29 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு ஜவான் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இதேவேளை, கொக்குவில் பிரதேசத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்டிருந்த 100 பாராக் கொமாண்டோக்களும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்.

Saturday, October 15, 2011

தமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்!
(அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-2)

இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமானது. அந்த யுத்தத்தை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது. இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறுநாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்;, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.

பிரபாகரன் அவர்கள் அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்குப் பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியச் சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகை (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம்.
போர் மூண்டது.

இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம்.

நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காகப் போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிடப் போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது.

இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.

You too India? (இந்தியா.. நீ கூடவா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது:

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது. இந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம் என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நன்பன். அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.

அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.

இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.

இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.

கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள் தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள்.

புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.

யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன:

18வது காலாட் படைப்பிரிவு.
41வது காலாட் படைப்பிரிவு.
72வது காலாட் படைப்பிரிவு.
91வது காலாட் படைப்பிரிவு.
115வது காலாட் படைப்பிரிவு.
65வது கவச வாகனப் பிரிவு.
831வது இலகு மோட்டார் படைப்பிரிவு.
25வது படைப்பிரிவு
10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு

என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்னிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது.

ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில்; பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை.

அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

தலைவரைக் கைதுசெய்யும் திட்டம்:

இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டுத் திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.

முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கணித்திருந்தார்கள்.
முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை மாற்றுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.
போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கொமாண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்படுகின்றது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளின் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.
இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.

அடிப்படைத் திட்டங்கள்:

அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.

1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்;க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.

2. குறைந்தது ஒரு விநியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.

3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.

4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.

5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.

இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.

ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டமும் கூட.

இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

கவனத்தில் எடுக்கமறந்த விடயம்:

உண்மையிலேயே புலிகளை ஒழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.

ஆனாலும், புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுணுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான் இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது.

அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது விடுதலைப் புலிகளுடன் என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.

தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையும், அவனால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.

இவ்வாறு சில அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில்; பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

அந்த அவலங்களின் அத்தியாயங்களை அடுத்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

தொடரும்...

Wednesday, October 12, 2011

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-1)

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது.
இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

அன்று காலை யாழ்g;பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்து இடைக்கிடை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடி இருந்தன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகள் வானில் பறந்தபடி யாழ்குடாவை நோட்டமிட்டு அலைந்தன.

அதைவிட, தாளப்பறந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் படைகளின் மிராஜ் 2000 சண்டை விமானங்களின் இரைச்சல்கள் யாழ் மக்களுக்கு மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது.

வீதிகள் மனித ஆரவாரங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் வாகன நடமாட்டங்களையும், துவிச்சக்கரவண்டிகளில் நடமாடிய ஒரு சில விடுதலைப் புலிகளையும் தவிர, வீதிகள் அனைத்தும் ஆள் அரவமற்றே காணப்பட்டன.

யாழ்ப்பாண மக்கள் மறுபடியும் ஒரு யுத்த சூழலை உணர்ந்தார்கள். கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வந்த நிகழ்வுகள், நிலைமையை அவர்களுக்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தன.

ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு சில மாதங்களாக பாவிக்கப்படாமல் இருந்த பதுங்கு குழிகளை மறுபடியும் தூசு தட்டி, செப்பனிட்டு, உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலைக்குள் பல வருடங்களாக வாழ்க்கை நடாத்திப் பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்களுக்கு, நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தது.

தலைவரின் தலைக்கு விலை:

முன்னைய நாள் (9ம் திகதி) இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை நிராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று ஜே.ஆர். அறிவித்திருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்தது.

தலைவரைக் குறிவைத்து நகர்வு:

அத்தோடு, 9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை 9ம் திகதி இரவு இந்தியப் படையினர் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி, அதிக கலவரத்தை தோற்றுவித்திருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகப் பேசப்பட்டது. 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுண் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.

யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்

விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை இந்தியா திணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்று சில இந்திய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், புலிகளின் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

இந்தியப் படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப் படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப் படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

யாழ் பலகலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.

மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள்.

ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள்.

அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள்.

புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை.

காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிறிய புன்முறுவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்துவந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது.

விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றிவிடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.

இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக் கொள்வது மேல் என்று மாத்தையா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)

ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

கேவலமான நடவடிக்கை:

அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.

அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலாட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry ) நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.

யாழ் குடாவில் இயங்கி வந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி மற்றும் ஈழநாடு போன்ற பத்திரிகைக் காரியாலயங்களைச் சுற்றிவளைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.

எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.

பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள்.

பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.

யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது.

ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.

இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றி வழைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.

இதே தினத்தில் யாழ்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. சில விடுதலைப்புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் மேற்கொண்ட யுத்தப் பிரகடனம்:

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்படும் இந்த முடிவை மேற்கொண்டதில் முழுப்பங்கும் அன்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும்.

இந்தியாவின் படைவீரர்களுக்கும், அதன் படைத்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு பிரஜைக்கும் கூட வரலாற்றில் பாரிய ஒரு தலை குனிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக, அன்று ராஜீவ் காந்தி எடுத்த அந்த முடிவு அமைந்திருந்தது.

இந்தியாவை முழுமையாகவே நம்பியிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியத் தலைவர் செய்திருந்த துரோகத்தின் விழைவு எத்தனை வேதனை நிறைந்ததும், கொடூரமுமானதும் என்பதை, அவர் அப்பொழுது உணர்ந்து கொள்ளவேயில்லை.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட அவலங்களின் அந்த அத்தியாயங்களை அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்