Wednesday, October 12, 2011

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-1)

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது.
இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம்.

அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

அன்று காலை யாழ்g;பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்து இடைக்கிடை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடி இருந்தன.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்த்திகள் வானில் பறந்தபடி யாழ்குடாவை நோட்டமிட்டு அலைந்தன.

அதைவிட, தாளப்பறந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் படைகளின் மிராஜ் 2000 சண்டை விமானங்களின் இரைச்சல்கள் யாழ் மக்களுக்கு மிகுந்த அச்சமூட்டுவதாக இருந்தது.

வீதிகள் மனித ஆரவாரங்கள் எதுவும் இல்லாது வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் வாகன நடமாட்டங்களையும், துவிச்சக்கரவண்டிகளில் நடமாடிய ஒரு சில விடுதலைப் புலிகளையும் தவிர, வீதிகள் அனைத்தும் ஆள் அரவமற்றே காணப்பட்டன.

யாழ்ப்பாண மக்கள் மறுபடியும் ஒரு யுத்த சூழலை உணர்ந்தார்கள். கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வந்த நிகழ்வுகள், நிலைமையை அவர்களுக்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தன.

ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு சில மாதங்களாக பாவிக்கப்படாமல் இருந்த பதுங்கு குழிகளை மறுபடியும் தூசு தட்டி, செப்பனிட்டு, உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலைக்குள் பல வருடங்களாக வாழ்க்கை நடாத்திப் பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்களுக்கு, நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டிருந்தது.

தலைவரின் தலைக்கு விலை:

முன்னைய நாள் (9ம் திகதி) இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை நிராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று ஜே.ஆர். அறிவித்திருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்தது.

தலைவரைக் குறிவைத்து நகர்வு:

அத்தோடு, 9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை பற்றிய செய்தியும் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை 9ம் திகதி இரவு இந்தியப் படையினர் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக அந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி, அதிக கலவரத்தை தோற்றுவித்திருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகப் பேசப்பட்டது. 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுண் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.

யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம்

விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தை இந்தியா திணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்று சில இந்திய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், புலிகளின் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள்.

அவர்கள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

இந்தியப் படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப் படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப் படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

யாழ் பலகலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.

மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள்.

ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள்.

அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள்.

புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை.

காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

சிறிய புன்முறுவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்துவந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது.

விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றிவிடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.

இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக் கொள்வது மேல் என்று மாத்தையா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)

ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

கேவலமான நடவடிக்கை:

அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.

அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலாட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry ) நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.

யாழ் குடாவில் இயங்கி வந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி மற்றும் ஈழநாடு போன்ற பத்திரிகைக் காரியாலயங்களைச் சுற்றிவளைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.

எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.

பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள்.

பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.

யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது.

ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.

இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றி வழைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.

இதே தினத்தில் யாழ்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. சில விடுதலைப்புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும்|| தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் மேற்கொண்ட யுத்தப் பிரகடனம்:

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்படும் இந்த முடிவை மேற்கொண்டதில் முழுப்பங்கும் அன்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையே சாரும்.

இந்தியாவின் படைவீரர்களுக்கும், அதன் படைத்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு பிரஜைக்கும் கூட வரலாற்றில் பாரிய ஒரு தலை குனிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு முடிவாக, அன்று ராஜீவ் காந்தி எடுத்த அந்த முடிவு அமைந்திருந்தது.

இந்தியாவை முழுமையாகவே நம்பியிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியத் தலைவர் செய்திருந்த துரோகத்தின் விழைவு எத்தனை வேதனை நிறைந்ததும், கொடூரமுமானதும் என்பதை, அவர் அப்பொழுது உணர்ந்து கொள்ளவேயில்லை.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட அவலங்களின் அந்த அத்தியாயங்களை அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

No comments:

Post a Comment