Wednesday, September 23, 2009

கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு...



விழுகை என்பது விதிப்படியும் எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றைய நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம்,
புனைவெல்லாம்விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயினர்.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கினர்.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்

சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.
மீண்டும்…..கண்ணீரில்
கருத்தரிக்கட்டும் காலநெருப்பு

No comments:

Post a Comment