Friday, September 18, 2009

கருணாநிதியன் சமசீர் கல்வி அகோர பசிக்கு அல்வா மிட்டாய்

இன்றைக்கு கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகும். வாழ்க்கை எனும் திசை தெரியாத கடலில், ஊழிக்காற்றின் அலைப்புகளில் கரை காண உதவும் சின்ன விளக்கு. ஆனால் இந்த சின்ன விளக்கை கைக்கொள்வதற்குள் மக்களின் குருதி வற்றிவிடுகிறது.
அறிவு, அறிவுக்கான தேடல் எனும் புள்ளியிலிருந்து புறப்பட்ட கல்வி இன்று மக்களை பிழிந்து குடிக்கும் கல்வி வள்ளல்களின்(!) கைகளில் ஒரு கொடு வாளாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிலரால், “அரசுப்பள்ளிகளில் யார் படிப்பது”, “மாடு மேய்க்கத்தான் லாயக்கு”, “பணம் கொடுத்தாலும் தரமான கல்வி” என்றெல்லாம் பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட இந்த தனியார் கல்வித்துறை இன்று தாங்க முடியாமல் அதிகமாகிப்போன கல்விச்செலவுகளால் மக்களை தவிக்கவைத்திருக்கிறது. சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. விவசாயம் செய்யமுடியாமல் போனாலும் ஏதோ கொஞ்சம் படிக்கவைப்போம் என கிராமங்களில் இருந்த நிலை மாறிய போது, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குழந்தைத்தொழிலாளர்களாக மாறி நகர்ந்த போது எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இப்போது சமச்சீர் கல்வி என்று கண்ணீர் துடைக்க கைக்குடையோடு வருகிறது.


ஐந்து வயதிலிருந்து தொடங்கும் அரசு கல்வி முறை சிறுவர்களை சிறுவர்களாகவே இயல்பாக வளரச்செய்யும் அமைப்புடன் இருந்தது. ஆனால் நகரிய முதலாளித்துவ வாழ்க்கை முறையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் சூழல் இதை அனுமதிக்கவில்லை. சில மாதங்களே மகப்பேறு விடுப்பாக கிடைக்கும் நிலையில் கிண்டர் கார்டன் எனும் சிறார் பள்ளிகள் வரவேற்படையத் தொடங்கின. இதுவே பின்னர் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே சீட்டுக்கு அலையும் நிலையாகவும், பல்லாயிரக்கணக்கில் கொட்டியழ வேண்டிய பெற்றோர்களின் உழைப்பை சுரண்டக்கூடியதாகவும் வீங்கிப்போனது. இதனோடு பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்திற்கென்றிருந்த மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் ஓரியண்டல் போன்ற முறைகளும் சேர்ந்து கொள்ள அரசுப்பள்ளிகளில் படிப்பதும் அல்லது கிண்டர் கார்டன், மெட்ரிகுலேசன் போன்ற பள்ளிகளில் படிக்காததும் கேவலத்திற்குறிய ஒன்றாக ஆகிப்போனது. ஐந்தாம் வகுப்பு படிக்கவைப்பதற்கே ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்கினால்தான் சமாளிக்க முடியும் என்றானதும் தான் உரைக்கத்தொடங்கியது. வெறும் ஆங்கில மொழிப்பயிற்சி மட்டுமே அறிவு என நம்பிய கூட்டத்தினரால் தோற்ற மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. இதனுடன் உயர்கல்வியின் கட்டணக்கொள்ளையும் சேர்ந்து போராட்டங்களாய் வெடிக்க ஆரம்பித்தன. ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தான் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிவித்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து சமச்சீர் கல்வி முறை என்பது புரட்சிகரமான மாற்றமோ அல்லது பெரிய சீர்திருத்தமோ இல்லை, கொஞ்சம் நகாசு வேலை அவ்வளவுதான்.

ஒன்றிலிருந்து ஆறு வரையுள்ள வகுப்புகளில் மட்டும் செயல்படுத்தப்படப்போகும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். தனியார் பள்ளிகளின் முறைகேடுகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தவர்கலெல்லாம், மாநில அரசின் கைகளுக்குப்போனால் முறைகேடுகள் நடைபெற ஏதுவாகும் என்றும், எல்லாமே மாநகராட்சி பள்ளிகளைப்போல் தரம் தாழ்ந்துவிடும் என்றும் புளித்துப்போனவைகளை எல்லாம் அள்ளிவீசுகிறார்கள். அரசும் உடனேயே தனியார் பள்ளி நிர்வாகிகளையும் அரசு அமைக்கும் குழுவில் சேர்த்துக்கொள்வோம் என்றும், பாடத்திட்டம் ஏற்படுத்தும் போது தனியார் பள்ளிகளும் கலந்தாலோசிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறது. இது என்ன முதலாளிகள் போராட்டம் நடத்தும் காலமோ, விமான முதலாளிகள் போராட்டம் நடத்தினார்கள், பள்ளி முதலாளிகள் போராட்டம் நடத்துகிறார்கள். கேள்வியெல்லாம் எப்போது இவர்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவார்கள் என்பதுதான்?

முதலில் கல்வி என்றால் என்ன என்பதை கொஞ்சம் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இயற்கையை தனக்கும் தான் சார்ந்த சமூக முன்னேற்றத்திற்கும் ஏற்ப மாற்றியமைக்கும் வழியில்தான் மனிதனின் வாழ்க்கையும் வரலாறும் தொடங்குகிறது. எனவே கல்வி என்பது இயற்கையை எப்படி சமூக முன்னேற்றத்திற்க்கு தக்கவாறு மாற்றியமைப்பது? என்ற சிந்தனைதான் கல்வியாக இருக்கமுடியும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி என்பது இப்படி இல்லை. தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கத்திலிருது எதையும் கற்றுக்கொள்ளும் வழமையை இன்றைய கல்வி ஏற்படுத்தவில்லை. ஒரு மாணவனுக்கு எந்த அளவு மனப்பாடம் செய்யும் திறனைருக்கிறது என்பதைத்தான் கல்வி சோதிக்கிறது. ஒரு இயந்திரத்தை எப்படி இயக்குவது என்பதுதான் கற்றுத்தரப்படும் பாடமாக இருக்கிறதே தவிர, அந்த இயந்திரம் எப்படி எந்த வடிவத்தில் உற்பத்திக்கு பங்களிக்கிறது அல்லது ஒரு இயந்திரம் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பதெல்லாம் பாடத்திட்டங்களாவதில்லை. ஏனென்றால் முதலாளிகளுக்கு தங்கள் இயந்திரங்களை இயக்கத்தான் ஆள் தேவையேயன்றி அதைப்பற்றி சிந்திக்கும் ஆட்கள் தேவையில்லை. இப்படி முதலாளிகளுக்கு தேவைப்படும் விதத்தில் தங்களை மாற்றியமைத்துக் கொள்வதுதான் கல்வி என்றானபின் அதன் அடுத்த கட்டமாய் மக்களின் பணத்திலேயே அவர்களை தயார்செய்வது என்ற விதிப்படிதான் தனியார் கல்வி நிலையங்களும் அதிலும் கொள்ளையடிக்கும் அவர்களின் லாபவெறியும் அரங்கத்திற்கு வந்திருக்கிறது. புது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சருகு போல் பெற்றொர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படி பயிற்றுவித்திடவேண்டுமென்று திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இந்த சமச்சீர் கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடும்?
அனைவருக்கும் கல்வியளிப்பது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் செய்து அறுபது வருடங்களை கடந்துவிட்டோம். இன்னும் அது ஏட்டிலேயே இருக்கிறது. தனியார் முதலாளிகள் லாபத்திற்க்கான உத்திரவாதம் எல்லாவகையிலும் உடனுக்குடன் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அவர்களுக்கு வரிவிலக்குகளையும், சலுகைகளையும் கோடிக்கணக்கில் ஒவ்வொறு நாளும் கொட்டிக்கொடுக்கும் போது, கல்வி வழங்கப் பணமில்லை என்னும் ஏமாற்றை இன்னும் எத்தனை நாள் சகித்துக்கொண்டிருப்பது? சாராயம் விற்றுக்கொண்டிருந்தவர்களெல்லாம் கல்வி நிலையம் நடத்த அனுமதித்துவிட்டு அரசு சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. பணக்காரனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கொரு கல்வி எனும் அநீதியை களைவதும், அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை தருவதும் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் அரசின் கடமைகள். இவைகளை வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் வீதியில் இறங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை

3 comments:

  1. very deep and sympathetic thinking!as usual lets hope for the best

    ReplyDelete
  2. nice thoughts..... future might b beautifu....***

    ReplyDelete
  3. ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
    சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

    நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் நீதிமன்றம் வரை சென்று வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான் பேசவேண்டிருக்கிறது.

    நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம். ‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல காலங்களுக்கு நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள் தள்ளிவிட்டது.
    ‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் காணலாம்.
    1. http://www.kelvi.tk
    2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
    மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார்,
    முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும்.
    ———————————————————

    அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள் ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று, புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை. உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

    கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

    ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
    ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    .
    .
    .
    விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

    பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.

    ReplyDelete